தாயென்று கும்பிடடி பாப்பா
- யோகாசனப் பயிற்சி 3
கீதா சாம்பசிவம்
யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோகாசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப் படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும். மனத்திற்கு மாபெரும் ஆற்றல் ஏற்படுகிறது. எத்தகைய செயலையும் எளிதில் செய்யவும். எதையும் தாங்கும் ஆற்றலும் ஏற்படுகிறது. உடல் நலம் பெறுகிறது. ஆன்மீகம் மேம்படுகிறது. இங்கே ஆன்மீகம் எனக் குறிப்பிடுவது அனைவரும் நினைப்பது போல் இறை வழிபாடு அல்ல. உண்மையான ஆன்மீகம் என்பது உள்முகத் தேடல். அத்தகைய தேடலுக்கு இது வழி காட்டுகிறது.
உடலும் மனமும் சேர்ந்து இயங்க வேண்டும் இந்த யோகாசனப் பயிற்சிகளின் போது. அப்போது தான் மனம் ஒருமுகப் படும். இதற்கு தியானம் பெருமளவில் உதவுகிறது. பிராணாயாமம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் ஆழ்ந்து போகலாம்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக நாம் முதலில் நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். நாம் உண்ணும் உணவின் மூலமே உடல் பாதிப்படையாமல் இருக்கும். உணவும் அளவோடு உண்ண வேண்டும். முறையான உணவாயும் இருக்க வேண்டும். உணவின் தரத்தையும் வளத்தையும் பொறுத்தே நம் உடல் வலிமை பெறுகிறது. சரியான உணவுப் பழக்கங்களைக் கடைப் பிடித்தல், அவ்வாறு கடைப்பிடிக்கச் செய்வது யோகாசனப் பயிற்சியாளரின் கடமையாகும். உணவும் மூன்று பிரிவாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை ராஜஸ உணவு, சத்வ உணவு, தாமஸ உணவு ஆகியவை ஆகும். இம்மூன்றில் சத்துவ உணவே சிறந்ததும் முதன்மையானதும் ஆகும். இவை எளிமையானதும் கூட. காய், கனிகள் நிறைந்த உணவே சத்துவ உணவு எனப்படும். இவற்றில் மிருகங்களின் மாமிசங்கள் சேராது. அதிகக் காரமோ, உப்போ, புளிப்போ இல்லாமல் மிதமான காரத்தோடும் உப்பு, புளிப்போடும் சாப்பிடவேண்டும். கூடியவரை காய்களை வேகவைத்து உண்ணவேண்டும்.
அடுத்து வரும் ராஜஸ உணவு பலவகையான காய்கறிகளோடு அப்பளம், வறுவல், பொரியல் போன்ற எண்ணை பதார்த்தங்களும், இனிப்பு வகைகளும் நிரம்பியது ராஜஸ உணவாகும். இவற்றால் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் ஆகும். உள்ளமும், உடலும் மந்தமடையும். சோம்பேறித் தனம் அதிகம் ஆகும். அடுத்து தாமஸ உணவு எல்லாமே அதிகமாய் உள்ளது. அதிகக் காரம், அதிக எண்ணெய், அதிக உப்பு, அதிகப்புளிப்பு, அதிக இனிப்பு, அதிகம் மசாலா இவ்வளவு சுவையோடு கூடிய உணவை அளவில்லாமல் உண்டாலும் உடலில் மிருகத்தனம், முரட்டு சுபாவம், மனமோ துர் எண்ணங்கள் நிரம்பியதாகவும் மாறிவிடும்.
ஆகவே நாம் உண்ணும் உணவு எப்படியோ அப்படியே நம் எண்ணங்களும் இருப்பதைக் கவனித்துக் கொள்ளவும். மகா பெரிய தபஸ்வியே திருட்டு அரிசியைச் சமைத்துப் போட்டுச் சாப்பிட்டதன் காரணமாய் மனதில் திருட்டு எண்ணம் புகுந்து, ராஜாவின் அரிய முத்து மாலையைக் களவாடியதும், பின்னர் அந்த உணவு ஒத்துக் கொள்ளாமல் வாந்திபேதி எடுத்து உணவின் அனைத்து சக்தியும் உடலை விட்டு வெளியேறியதும், அவர் மனம் வருந்தி ராஜாவிடம் உண்மையைச் சொன்னதும், அப்போது வியப்படைந்த அரசன், உணவு வந்த விதத்தைக் கண்டு பிடித்து அது திருடர்களால் கொள்ளையடிக்கப் பட்ட பொருளில் வாங்கிய அரிசியும் உணவுப் பொருட்களும் கொண்டு சமைத்த உணவு. அதன் தாக்கத்தாலேயே தபஸ்வியான அந்தத் துறவிக்கே திருடும் எண்ணம் புகுந்தது என்பதையும் புரிந்து கொண்டான். அனைவருக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இனி சில குறிப்பிட்ட ஆசனங்களையும் அவற்றின் பயன்களையும் பார்க்கலாம்.
அடுத்துத் தேவையானது உடை. ஆண்களாய் இருந்தால், பைஜாமா, குர்த்தா, அல்லது அரைக்கால் சட்டை, மேற்சட்டை போன்றவற்றை அணியலாம். பெண்கள் சல்வார், குர்த்தா அணிந்து கொண்டு பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது. புடைவைக் கட்டிக்கொண்டு யோகாசனப் பயிற்சி மேற்கொள்வது சரியாக இராது.
பொதுவாய் யோகாசனப் பயிற்சி பெறுபவர்கள் முக்கியமாய்ச் செய்வது சூர்ய நமஸ்காரம். இதை இளங்காலைப் பொழுதில் சூரியன் கிழக்கே உதிக்கும் சமயம் அவனுடைய பொற்கிரணங்கள் உடலில் படும்படியாகக் கிழக்கே பார்த்து நின்று கொண்டு செய்வதே உசிதமானது. சூரிய ஒளி படும்படியான இடங்களில் குடியிருக்க முடியாதவர்கள், இதற்கென இருக்கும் மைதானங்கள், கடற்கரை, மொட்டை மாடி போன்ற இடங்களில் மேற்கொள்ளலாம், அல்லது இவற்றின் முக்கியமான சில ஆசனப் பிரயோகங்களை வீட்டுக்குள்ளேயே செய்து வரலாம். அதைப் பின்னால் பார்க்கலாம். இப்போது சூர்ய நமஸ்காரத்தை ஆரம்பிக்கும் முன்னர் உடலை அதற்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். கை, கால்களை அசைத்துக்கொண்டும், நீட்டியும், மடக்கியும், மேலே தூக்கியும், கைகளைத் தட்டியும், முழங்கால்களை மடக்கியும், நீட்டியும் சிறிது நேரம், குறைந்தது பத்து நிமிஷம் மனதையும், உடலையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
சூர்ய நமஸ்காரத்தின் மூலம் உடலும், உள்ளமும் வலுப்பெறுவதோடு கண் பிரச்னைகள் இருந்தாலும் அவை குறைய ஆரம்பிக்கும். இந்த சூர்ய நமஸ்காரத்திலேயே பல்வேறு விதமான ஆசன வகைகள் வந்துவிடும். எனினும் இப்போது நாம் பார்க்கப் போவது அவற்றின் பத்து நிலைகளே.
முதல் நிலை: எப்போது யோகாசனப் பயிற்சி செய்தாலும் கீழே ஒரு பாயைப் போட்டுக்கொள்வது நல்லது. பூமியில் எதுவும் போடாமல் நேரே நின்று கொண்டு செய்வதால் நம் உடலுக்குத் தேவையான சக்திகள் சேகரிக்கப் பட்டு பூமிக்கே சென்றுவிடும் என்பது யோகாசனத்தின் முக்கிய விதியாகும். ஆகவே வீட்டினுள் ஒரு அறையிலோ, மொட்டை மாடியிலோ, அல்லது உங்களுக்குச் செளகரியமான ஒரு திறந்த வெளியிலோ கீழே பாயைப் போட்டுக்கொண்டு கிழக்கே பார்த்த வண்ணம் நின்று கொண்டு இரு கைகளையும் கூப்பிக் கொள்ளவும். வணக்கம் செலுத்தும் பாவனையில் நிற்க வேண்டும். கண்கள் நேர் பார்வையாகச் சூரியனை மட்டுமே பார்க்க வேண்டும். வயிற்றை உள்ளிழுத்துக்கொண்டு மார்பை நேராக நிமிர்த்திக் கைகளை ஒன்றாய்ச் சேர்த்துக்கொண்டு கும்பிடும் நிலையில் நின்று கொண்டு சூரியனைக் குறித்த தோத்திரப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்களை மனதுக்குள் சொல்லிக்கொண்டு துதிக்கவும். கைகளின் கட்டை விரல்கள் மார்பைத் தொடவேண்டும். முதுகைப் பின்னால் கொஞ்சம் சாய்த்துக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை: அப்படியே உடலைக் கீழ் நோக்கி வளைக்க வேண்டும். உள்ளங்கைகளைக் கால்களுக்கு எதிரே தரையில் படும்படி கீழே வைக்க வேண்டும். முதுகை வளைத்துக்கொண்டு கைகளைத் தரையில் வைக்கும்போது முழங்கால்கள் வளையாமல் நேரே இருக்க வேண்டும். நம் முகம் இரு முழங்கால்களுக்கும் இடையில் வர வேண்டும். இப்போது உள்ளிழுத்த மூச்சை வெளியே விட வேண்டும்.
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















