-
ஜீவகாருண்யம் - Hospitality
- வெங்கட். தாயுமானவன்
April 9, 2009
இன்று வடலூர் சென்றிருந்தேன்.
மிக வித்தியாசமான அனுபவம். சபையைச் சுற்றி வந்து தியானம் முடிந்து, ஆற அமரப் பெரியோர்களிடம் உரையாடி முடித்தபோது நேரம் காலை 10 மணி. விடியலிலேயே போய் இறங்கிவிட்டதால் வயிற்றில் பசி. அணையா அடுப்பின் விருந்து 12 மணிக்குதான். என்ன செய்வதெனத் தெரியாமல் சத்தியதரும சாலையைச் சுற்றி சுற்றி வந்தேன். சுற்றுலாப் பேருந்து ஒன்று வந்து நிற்க, இறங்கியவர்கள் அனைவரும் சோற்றுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்க, பாரத்ததும் அடக்கி வைத்த பசி கொளுந்து விட்டு எரியத் துவங்கியது.
சரி, அந்த அணையா அடுப்பையாவது போய்ப் பார்த்து வருவோமென அந்த அறைக்குள் நுழைந்தேன். 'கம கம'வென வாசனை. என்னை மறந்து நின்ற வேளையில் என் பின்னதலையில் யாரோ தட்டியதுபோல தோன்ற, திரும்பிப் பார்த்தால் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, "என்னடா, பசிக்குதா, சாப்பிடறியா?" என்றதும். மறுக்காமல் தலையாட்டினேன். அப்படியே என் கையைப் பிடித்து இழுத்துப்போய் ஓரமாய் உட்காரவைத்து அந்த அம்மாள் தன் மடியில் வாழையிலையில் முடிந்து வைத்திருந்த சோற்றை எனக்குப் பிரித்து வைத்துப் பரிமாற, கண்களில் நீர் திரள சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். சட்டென உள்ளே போன அந்த அம்மா ஒரு அகலப் பாத்திரம் நிறைய நீர்கொண்டு வந்து என்முன் வைத்து, "இதைக் குடி, நான் போயிட்டு வந்துடறேன்." எனக் கிளம்ப, எனக்கு வார்த்தையே வரவில்லை. தலையாட்டி வைத்தேன். போன அம்மாள் உடனே திரும்பி வந்தார்கள், "டேய்..இந்தப் பாத்திரத்தை எடுத்துட்டுப் போயிட மாட்டியே" என்றார்கள். இதற்கும் நான் இல்லையேனத் தலையாட்டினேன்.
அந்த அம்மாள் போய் வருவதற்கும் நான் சாப்பிட்டு முடிப்பதற்கும் சரியாக இருந்தது. இலையை எறிந்து விட்டுக் கை அலம்பி, தாகம் தணிந்து பாத்திரத்தை அவரின் கையில் கொடுத்துவிட்டு, "வணக்கம்" என என் பசியாறிய நன்றியைக் கூறினேன். சற்று உயரத்தில் நின்றிருந்த அந்த அம்மாள், எனக்கு சரியாய்க் கீழே வந்து நின்று, "வணக்கம்" எனச் சொல்லி, "வணக்கம் யார் சொன்னாலும் திருப்பித் தந்துடணும். அதான் நீ சொன்னதும் நான் திருப்பிக் கொடுத்துட்டேன்.." என்றார்கள். அவர்களிடமிருந்து விலகி சில அடிகள் நடந்திருப்பேன், ஒரு வயோதிகர் என்னை அழைத்துப் புன்னகைத்து, "அந்தப் பைத்தியம் தனக்கு வைத்திருந்த சோற்றை உனக்குத் தந்திருக்கு.." எனக் கூற ஆடிப்போய் விட்டேன். அவர்கள் எனக்குப் பைத்தியமாய்த் தோணவில்லை. அவர்களை ஒரு புகைப்படமெடுக்க மீண்டும் தேடி அவர்களை நெருங்கினேன். என் காதுக்குக் கீழிருந்த வீக்கத்தைப் பார்த்து "ஆஸுபத்திரி போ, எல்லாம் சரியாயிடும்" என்று கூறி விடுவிடுவெனப் போய்விட்டார்கள்.
திகைத்துப்போய் நின்றேன். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடியவனின் சன்னிதானத்தில் யார்தான் பசியோடிருக்க முடியும்? பசியாற்ற யாரால்தான் முடியாது?
புரிந்தது, "ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்"
என் தமிழெல்லாம் அழகியின் தமிழே!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















