தாயென்று கும்பிடடி பாப்பா
- பிரார்த்தனை
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
பிரார்த்தனை என்பது மிகவும் வலிமை பெற்றது, அதுவும் கூட்டுப் பிரார்த்தனையின் பலன் மிக அதிகம். நீங்கள் யாவரும் கடவுள் முன் உங்களுக்கு வேண்டியவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பீர்கள்:"நான் முதல் இடம் பெற வேண்டும்", நான் நல்ல பணக்காரராக ஆக வேண்டும்" என்று இதைப் போல் நிறைய கேட்பீர்கள். பிரார்த்தனையைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு கிராமத்தில் ஒரு சன்யாசி ஒரு குருகுலம் நடத்தி வந்தார். அந்த இடம் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் இருந்தது. அவரிடம் பல சிஷ்யர்கள் ஒரு வருட கலமாகப் படித்து வந்தனர். ஒரு நாள் அந்தக் குரு தன் மாணவர்களை அழைத்தார்.
"மாணவர்களே, நீங்கள் இங்கே வந்து ஒரு வருடம் பூர்த்தி ஆகப் போகிறது. நான் இன்று ஒரு ப்ரீட்சை வைக்கப் போகிறேன் உங்களுக்கு சம்மதமா?"
"ஆம் குருவே" என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.
"சரி, கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டும். அது உங்களுக்காக மட்டும் தான் இருக்க வேண்டும். நான்
உங்களைச் சுற்றி வந்து பார்ப்பேன். எது நல்ல பிரார்த்தனை என்று தீர்மானிப்பேன்"
ஆரம்பமானது மாணவர்களின் பிரார்த்தனை. ஒருவன் சொன்னான், "ஒ கடவுளே, எனக்குச் சிறந்த அறிவைக் கொடு". இன்னொருவன் சொன்னான்ன்
"எனக்கு நல்ல ஆரோக்கியம் கொடு, எல்லோரையும் நான் வெற்றி பெற வேண்டும்.". மூன்றாவது மாணவன் கேட்டான், "நான் பெரிய தலைவராக வர வேண்டும்" என்றான். நாலாவதாக ஒருவன், "நான் சிறந்த பணக்காரனாக வர வேண்டும்" என்றான். ஐந்தாவதாக இருந்த மாணவன், "கடவுளே நான் சமூகத்திற்கு உபயோகமாகி நிறையத் தொண்டுகள் செய்ய வேண்டும்".
குரு அவன் முன் வந்து நின்றார், ஆனால் அவனோ கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்தான், "அன்பு தெய்வமே, இந்த உலகம் முழுவதும் இன்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்" குரு அவனைத் தட்டிக்கொடுத்து அவனைக் கூப்பிட்டார். பின் சொன்னார்,"இவனே ஜெயித்து விட்டான்.இவனுக்குத்தான் பரிசு"
எல்லா மாணவர்களும் அவனின் பிரர்த்தனை என்ன என்று அறிய ஆவலாக இருந்தனர். பின் அந்த மாணவனைக் கேட்டனர். அவனும் சொன்னான். எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும், உலகத்தில் சாந்தி நில்வட்டும்"
ஒரு மாணவன் எழுந்தான், "குருவே இது எப்படிநீங்கள் சொன்னபடி பிரார்த்தனை ஆகும்? அவரவர்களுக்குத்தான் வேண்ட வேண்டும் என்றீர்களே! இவனோ
உலகத்துக்காக அல்லவோ வேண்டுகிறான்?"
"இதற்கு பதில் அந்த வெற்றிப் பெற்ற மாணவரே தரட்டும்" என்றார் குருஜி.
வெற்றி பெற்ற மாணவனும் நின்றான், "அன்பு சகோதரர்களே, எல்லோரும் நன்றாக இருந்தால் தான் நான் நன்றாக இருப்பேன். என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் நன்றாக இல்லை என்றால் அது எனக்கு வேதனை கொடுத்து என் உடல் நல்ம் கெடும், எனக்கு நிம்மதி கிடைக்காது. ஆகையால் இந்தப் பிரார்த்தனை என் நலத்திற்குத்தான்" என்றான்.
எல்லா மாணவர்களும் கைதட்டி அவனைப் பாராட்டினார்கள். அவர்களும் அந்தப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்," உலக்த்தில் இருக்கும் எல்லோரும் நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழட்டும்"
குழந்தைகளே, இப்போது புரிந்ததா? எல்லோர் நலனுக்கும் நாம் வேண்ட நமக்குத் தானாகவே நல்லது கிடைக்கும்.
அன்புடன் அம்மம்மா

















