தாயென்று கும்பிடடி பாப்பா
- என் கல்யாணம்
இணையப் பாட்டி
பெண் பார்க்காமல் பெரியவர்கள் சொல்படி நடந்த கலயாணம் தான் என் கல்யாணம். எனக்குப் பெண் பார்க்கும் படலம் கண்டாலே அலர்ஜி. பலர் வந்து பின் அவர்களுக்கு பஜ்ஜி, சொஜ்ஜி கொடுத்து பின் பிள்ளை வீட்டினர் தாங்கள் ஊருக்குப் போனதும் பதில் போடுகிறோம் என்று சொல்வதும், பெற்றோர்களுக்கு டென்சன் கொடுப்பதும் எனக்குப் பிடிக்காத ஒன்று. நல்ல வேளையாக எனக்கு அது போல் நடக்கவில்லை. சிறு வயதிலிருந்தே பாட்டு, நாடகம், நடனம், மேடைப்பேச்சு என்று என்னை மிகவும் பிசியாக வைத்திருந்ததால் திருமணம் என்றாலே எங்கே என் சுதந்திரம் பறிக்கப் பட்டுவிடுமோ என்று மனதினுள் ஒரு பயம் ஏற்பட, திருமணம் என்ற சொல்லே பிடிக்காமல் இருந்தது. ஆனால் அப்பாவைக் கண்டால் சிம்மஸ்வப்பனம், அத்தனை பயம் கலந்த மரியாதை, அம்மாவும் ரொம்ப கண்டிப்புத்தான். ஆகையால் மனம் திறந்து பேசவே பயம். இப்போது போல் அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொள்ள மாட்டோமா என்று இருந்தாலும் அவர் ஆபீஸிலிருந்து வந்தவுடனே கோடி அறைக்குப் போய் அமர்ந்து விடுவேன். கையில் ஒரு புத்தகம் இருக்கும் என்னைப் பெண் கேட்டுப் பலர் வர ஆரம்பித்தவுடனே என் அம்மா எனக்குத் தகுந்த பையனைத் தேட ஆரம்பித்தார், ஆனால் ஆரம்பத்திலேயே நான் பம்பாய் விட்டுப் போக மாட்டேன் என்று தைரியமாய் கண்டிஷன் போட்டேன். பிறந்து, வளர்ந்து, படித்து, அங்கேயே ஒரு ஆசிரியை ஆன இடம். மூலைக்கு மூலை என் மாணவிகள். அவர்களை எப்படி விட்டுப் போக மனது வரும்?
இதற்குள் முதலாக ஒரு வரன் வந்தது. அந்த இடத்தில் இரண்டு மகன்கள் தன் தந்தையுடன் பெரிய பங்களாவில் இருக்கின்றனர், ஜாதகம் சேர்ந்திருந்தது. பெண் பார்க்க என் அம்மா அழைத்தார். அதற்கு அந்தப்பிள்ளை பெண் நான் ஏற்கனவே தமிழ்ச்சங்கத்தில் பேசும் போது பார்த்து விட்டேன் என்றானாம். ஓ இதெல்லாம் அவன் ஏற்பாடு போல் இருக்கிறது என்று எண்ணினேன். பின் என்ன, முகூர்த்தம் வைக்க வேண்டும். அதற்குள் ஒரு பெண்மணி வந்து அங்கு சூழ்நிலை சரியில்லை உன் வீட்டிற்கு அது ஒத்து வராது. பிள்ளையின் தந்தையைப் பற்றி நல்ல பெயரில்லை என்றாள். அப்பாடி ஒரு பெரிய பாரம் நீங்கியது, நல்ல வேளை தப்பித்தேன், எங்கே என் நாடகங்களில் நடிக்க இடையூறு வந்து விடுமோ, என் வயலின் வாசிப்பு நின்று விடுமோ என்று எல்லாம் பயம் இருந்தது. பின் இரண்டு மாதங்கள் ஓடின. ஒரு நாள் என் பெரிய அக்காவிடமிருந்து ஒரு கவர் வந்தது. அதைப் பிரித்தவுடன் ஒரு ஆணழகன் போட்டோ விழுந்தது. அவள் கடிதத்தில் எழுதி இருந்தாள், "அம்மா இந்தப் பையன் நமக்கு உறவு தில்லியில் என் வீட்டு அருகில் இருக்கிறான். கை நிறைய சம்பளம்". அருகில் நின்ற எனக்குக் கோபம் கோபமாக வந்தது. "என் அருமை பம்பாயை விட்டு தில்லி எப்படிப் போவது? இந்த அக்காவுக்கு மூளையே இல்லை" என்று முணுமுணுத்தேன். என் அம்மாவும் இதை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். உறவு விட்டுப் போகக் கூடாது, அருகில் பார்த்துக் கொள்ளப் பெரிய பெண்ணும் மாப்பிளையும் இருக்கிறார்கள். ஆகையால் இதையே நிச்சியம் செய்யலாம் என்று முடிவு செய்து விட்டார். நாம் ஒன்று நினைக்க பகவான் ஒன்று நினைக்கிறார். அவ்வளவுதான், பெண் பார்க்கும் படலம் இல்லை, என் போட்டொ மட்டும் அனுப்பினார்கள். சரி, பம்பாயிலாவது கலயாணம் நடக்குமா என்றால் அதுவும் இல்லை. சென்னையில் நடத்தும்படி அவர்கள் சொன்னதன் பேரில் சென்னையில் நடந்தது. என் நண்பர்கள் இல்லை, பள்ளி மாணவ மாணவிகள் இல்லை. எல்லாம் புது முகங்கள், புது ஊர்,
இப்படியாக என் கல்யாணம் நான் மூஞ்சியைத் தூக்கி வைத்தபடி இருக்க நடந்தது. இந்தத் திருமணத்தினால் தில்லி போகும்படி ஆகி நிறைய பொறுமை, விட்டுக் கொடுக்கும் தன்மை, அன்பு, பாசம் காட்டுதல், வேறு மொழி பேசுபவரிடமும் அன்பாகப் பழகுதல், எதிர்த்துப் பேசாதிருத்தல், மரியாதை கொடுத்தல் போன்றவைகள் அதிக அளவு கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த 45 வருட நீண்ட வாழ்க்கைப் பயணம் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் அன்பை அள்ளிக் கொடுக்கும் பயணமாக இருக்க பெரியவர்கள் வாழ்த்த வேண்டும்.
அன்புடன் விசாலம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















