தாயென்று கும்பிடடி பாப்பா
- மதிநிறை மந்திரி
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
சில சமயம் நாம் அனாவசியமாக சிலருக்குப் புகழாரம் சூட்டுகிறோம். அவர் அதற்குத் தகுதியாக இருந்திருக்க மாட்டார் எனினும் அவர் செல்வாக்கைப் பார்த்து, அவரது அன்பினால் நமக்கு எதாவது ஆதாயம் கிடைக்கும் என்று தன்னல எண்ணத்தினால் அவரைப் பொய்யாக உயர்ந்து பேசுகிறோம். சில சமயம் நமது பெரியவர்கள், தாய் தந்தை தவறு செய்தாலும் அதை மரியாதையுடன் பக்குவமாகப் பணிவான் குரலில் எடுத்து சொல்ல வேண்டும். உண்மை எப்போதுமே வெல்லும். மனத்திடமும், தைரியமும் இருந்தால் எப்போதுமே நாம் முன்னுக்கு வர முடியும்.
இப்போது ஒரு கதை பார்க்கலாம்.
ஒரு நாட்டை ஒரு அரசர் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தார். அவர் தன் ஆட்சி எல்லோருக்கும் பிடித்திருக்கிறதா? தான் மேலும் நாட்டு நலனுக்கு எதாவது செய்ய வேண்டுமா? என்று தெரிந்துக்கொள்ள ஒரு சிறந்த அறிவுறை வழங்கும் மந்திரியைத் தேடினார். அதற்கு நாடு முழுவதும் தண்டோரா போடச்சொன்னார். "இதனால் நம் அரசர் சொல்வது என்னவென்றால், டம்டம் டம்... நம் அரசருக்கு சிறந்த மந்திரி தேவை டம்டம்டம்... நாளை திங்கட்கிழமை மந்திரியாக விருப்பப்படுபவர் அரசரை வந்து சந்திக்கலாம் டம்டம்டம்..." என்று பணிவாளர்கள் நாடு முழுவதும் இதை அறிவித்தனர்.
பலர் கூடினர், அதில் நான்கு பேர்களைத் தேர்ந்தெடுத்தார் அரசர். முதலில் ஒருவனை அழைத்தார். அவனிடம், "அறிவாளியே, நான் எப்படி அரசை ஆள்கிறேன் என்று சொல்" என்று கேட்டார்.
முதல் மனிதன் சொன்னான், "மதிப்புக்குறிய அரசரே, நாடு உங்கள் தலைமையில் மிகவும் சுபீட்சமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்"
இரண்டாவது மனிதனிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது.
அவன் பதிலளித்தான், "அன்புக்குரிய அரசரே, உங்கள் ஆட்சியில் நாங்கள் சுவர்க்கத்தில் இருப்பது போல் தான் அனுபவிக்கிறோம். நான் என்ன சொல்ல இருக்கிறது?"
மூன்றாவது மனிதனோ, அரசரை மிகவும் புகழ்ந்து தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடினான். இவர்கள் எல்லோருக்கும் அரசன் வைரக்கற்களை அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பிவைத்தார்.
கடைசியில் நான்காமவன் வந்தான். அரசர் இதே கேள்வியை அவனிடமும் கேட்டார்.
அதற்கு அவன், "நீங்கள் நன்றாக ராஜ்யத்தை ஆண்டாலும் இன்னும் மக்கள் நலனுக்க்காகப் பல செய்ய வேண்டும். மரங்கள் நிறைய நட வேண்டும். இன்னும் வழிப்போக்கர்களுக்கு சத்திரங்கள் பல கட்ட வேண்டும். சுங்க வரியைக் குறைக்க வேண்டும்" என்று அவர் செய்யாத சில பணிகளைப் பணிவாக எடுத்துறைத்தான்.
அரசருக்கு அவனது தீரம் மற்றும் உண்மை பேசுதல் மிகவும் பிடித்திருந்தது. அனாவசியமாகப் புகழாரம் சூட்டாமல் தவறுகளைச் சுட்டிக்காட்டியது மிகவும் பிடித்தது. அவனையே தன் மந்திரியாக்கிக் கொண்டார்.
அனாவசியமாகப் பொய் சொல்லிப் புகழ்ந்த மற்றவர்கள் தங்கள் வைரக்கற்களைப் பார்த்துப் பெருமை அடைந்தனர், ஆனால் அவை போலி என்று தெரியவந்தது, தங்கள் முட்டாள் தனத்திற்கு வருந்தினர்.
ஆகவே உண்மை பேச பயப்படாதீர்கள் எப்போதும் உண்மையே பேசுங்கள்.
இந்தக்கதையை கவிதை போல் சொல்கிறேன்.
மன்னர் ஒருவரின் நல்லாட்சி, மக்கள் அதற்கு முதற்சாட்சி;
மக்கள் மேலும் நன்மை பெற மதிநிறை மந்திரி தேவையென
எல்லோருக்கும் அறிவிக்க மன்னர் ஆணை பிறப்பிக்க,
"இதனால் அறிவிப்பது என்னெவெனில் டும்டும் டும்டும் டும்டும்டும்
மன்னவருக்கு ஓர் அறிவான மந்திரி தேவை டும்டும் டும்"
மந்திரியாகும் ஆவலுடன் மனிதர் பலரும் முன்வந்தார்,
அவருள் தேறிய நால்வரிலே முதலாமவனை அவர் கேட்டார்,
"அறிவாளியே என் ஆட்சியிலே, யாதும் குறை கண்டீரோ?" என
"ஆஹா! உங்கள் ஆட்சிதனில் குறையா? அப்படி ஒன்றுமில்லை,
அனைவரும் சுவர்க்க பூமிதனில் இருக்கிறோம்!" என்றவனுரைத்த்தான்
இரண்டாம் மனிதன் வந்திடவும் அவனிடம் அதையே கேட்டதற்கு
"இல்லவே இல்லை குறயொன்றும் அனைவரும் சுபிட்சம் தான்" என்றான்
மூன்றாமவனும், "தங்களைப்போல் அரசர் உலகில் இல்லை" என
முகஸ்துதி செய்தான், மூவருக்கும் வழங்கினர் சன்மானம் வைரங்கள்,
மகிழ்ந்தே அவர்கள் மனம் குளிர்ந்து, மன்னரை வாழ்த்திச் சென்றபின்னர்
மந்திரியாக விழைந்தோரில் எஞ்சியவன் தன் பதிலாக
"கருணை நிறைந்த காவலரே! கடவுள் நிகராம் எம் அரசே!
ஆட்சியென்றும் நன்றுதான் அதில் அனைவரும் சுகமே ஆனால்" என
"ஆனால் என்ன? அனைத்தையுமே அருள்கூர்ந்து உரைத்திடுவீர்" என்றார்.
"மரங்கள் பல நட வேண்டும் மற்றும் சுங்கவரி குறைத்திட வேண்டும்,
வழிப்போக்கர்கள் வசதிபெற எங்கும் வரவேண்டும் பல சத்திரங்க்ள்"
என்றிவைபோல் பல குறைகளையும் எடுத்துரைத்திடவே மன்னவரும்
மகிழ்ச்சி யடைந்த காரணத்தால் மற்றவன் ஆனான் மந்திரியாய்
ஏனையோர் வைரங்கள் தம்போல் போலியென்றறிந்தேமாந்தனரே
மனத்திடம் வேண்டும் உண்மையென்றும் பேசவும் வேண்டும் உண்மையதை
மனிதருள் உண்மை உரைப்பவர்க்கே மாபெரும் பதவிகள் கிடைத்திடுமே!
அன்புடன் அம்மம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















