அறூபத்து மூவர் - 8
பிள்ளையார் பாட்டி
முதலில் சேக்கிழாரின் பிள்ளைப் பருவம் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? அப்போது தான் அவரின் அறிவாற்றல் பிள்ளைப் பருவத்தில் இருந்தே எவ்வாறு சிறப்போடு இருந்தது எனத் தெரிய வரும்.
சேக்கிழாரின் தந்தையாருக்கு நெடுநாட்களாய்ப் பிள்ளைப் பேறில்லாமல் இருந்து பிறந்தவர் அருண்மொழித் தேவர் என்ற பெயரிடப் பட்ட சேக்கிழார். இவர் பெயரே ஈசனின் திருப்பெயராகவும் அமைந்தது. சில ஆண்டுகளிலேயே அவருக்கு ஒரு தம்பியும் பிறக்க, அந்தக் குழந்தைக்குப் பாலறாவாயர் என ஞான சம்மந்தரின் திருப்பெயரிட்டு இரு குழந்தைகளையும் வளர்த்து வந்தனர் பெற்றோர். சேக்கிழார் இளமைப் பருவத்தில் தன் தாயாரிடமே கல்வி கற்று வந்தார். தாயாராலேயே அவருக்குச் சைவத்தின் மீதும், தமிழின் மீதும் பெரும் ஈடுபாடும் பக்தியும் ஏற்பட்டது. இளம் வயதிலேயே சைவப் பெரியோர்களின் பாடலை மனனம் செய்து பண்ணோடு இசை அமைத்துப் பாடும் வல்லமையும் பெற்றிருந்தார் சேக்கிழார். மதிநுட்பம் கொண்டவர் ஆகையால் திருக்குறள் முழுதையும் நன்கு விளக்கத்தோடு மனப்பாடமும் செய்து கற்று, மிக்க புலமையுடன் விளங்கினார்.
இத்தகையதொரு காலத்திலே இரண்டாம் குலோத்துங்கண் என அழைக்கப் பட்ட அநபாய குலோத்துங்கன் சிறந்த சிவ பக்தன். தமிழின் மேலும், சைவத்தின் மேலும் பக்தி பூண்டிருந்தான். கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலை நகராய்க் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். இவனுடைய அவையில் பெரும்புலவர்கள் இருந்தனர். அவர்களை நன்கு மதித்து உரையாடிக் களிப்பதோடல்லாமல், தனக்கு ஏற்படும் சந்தேகங்களையும் புலவர்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டான் மன்னன். ஒரு நாள் அவைப்புலவர்களிடம் அநபாயன் மூன்று கேள்விகளைக் கேட்டான். அவை யாவை என்றால்:
1. நிலத்தை விடப் பெரியது எது?
2.மலையை விடப் பெரியது எது?
3.கடலை விடப் பெரியது எது?
மன்னன் மனத்தை இம்மூன்று கேள்விகளும் துளைத்து எடுத்தன. அரசவைப் புலவர்களை அழைத்து மூன்று நாட்களுக்குள் இவற்றுக்கு விடை காணுமாறு சொல்லி அனுப்பினான் மன்னன். மன்னன் கேள்விகளை சேக்கிழாரின் தந்தையும் கேட்டார். மன்னன் புலவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இவற்றுக்கு உரிய விடைகளைச் சொல்லலாம் என்றும் அறிவித்தான். மிகுந்த மனக்குழப்பத்தோடு வீடு வந்தார் சேக்கிழாரின் தந்தையார். அருண்மொழித் தேவர் ஆகிய சேக்கிழார் தந்தையின் முகவாட்டத்தைக் கண்டு என்னவெனக் கேட்டறிந்தார்.
"தந்தையே, கவலை வேண்டாம், இவை மிக எளிதான கேள்விகளே, இதோ விடை!" என்று மூன்று கேள்விகளுக்கும் விடையை எழுதிக் கொடுக்கின்றார். மன்னனிடம் எடுத்துச் செல்கின்றார் சேக்கிழாரின் தந்தை. மன்னனிடம் சேக்கிழார் கொடுத்த ஓலையைக் கொடுக்க அதைப் பிரித்துப் பார்த்தான் மன்னன். அசந்து போனான். அவற்றில் இருந்த விடைகள்:
1. நிலத்தை விடப் பெரியது எது?
:காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
ஒருவனுக்குத் தக்க நேரத்தில் தகுந்த உதவியைப் பிறனொருவன் செய்யும் போது அந்த உதவியானது சிறியதாய்த் தெரிந்தாலும் உண்மையில் அதுவே இந்த உலகை விடப் பெரியதாக இருக்கும்.
2. மலையை விடப் பெரியது எது?
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
தன்னுடைய வாழ்க்கையில் ஒழுங்காகவும், அடக்கம் ஒழுக்கம், நேர்மை அனைத்தையும் கடைப்பிடிப்பவனின் வாழ்வின் உயர்வானது மலையை விடப் பெரியதாகும்.
3.கடலை விடப் பெரியது எது?
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
இந்த உதவியையோ, அல்லது வேலையையோ செய்தால் நமக்கு இன்ன பயன் கிடைக்கும் என்று அதனை ஆராய்ந்து பார்க்காமல், பலனை எதிர்பாராமல் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால் அந்த உதவியால் கிட்டும் நன்மையானது கடலை விடப் பெரியதாக இருக்கும்.
இதைக் கண்ட மன்னன் சேக்கிழாரை அவைக்கு வரவழைத்து தக்க மரியாதைகள் செய்ததோடு அவரைத் தன் அமைச்சராகவும் ஆக்கிக் கொண்டான். என்றாலும் மன்னன் சமண சமய நூல்களைப் படித்துப் போற்றுவது சேக்கிழாரின் மனதை உறுத்தியது. மன்னனிடம் சென்றார். "மன்னா,. இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரத்தக்க நூல்களும், பாடல்களும் சைவ சமயத்திலும் உள்ளன. அவற்றைப் பாடிப் பரந்த அடியார்களும் பலர் உள்ளனர். அவர்களின் கதைகளைக் கேட்பீராக!" என்று வேண்டுகின்றான். மன்னனும் அவ்வாறே ஆகட்டும் என உத்தரவிட சேக்கிழாரும் இறைவனைத் துதித்துத் தாம் நாயன்மார்களின் சரித்திரத்தைப் பாடும் வல்லமையைத் தந்தருளும்படி வேண்டுகின்றார். மன்னனுக்கு ஒவ்வொரு நாயன்மார் வரலாறாகக் கூற மன்னனும் அதைக் கேட்டு மகிழ்ந்து இவற்றை ஒரு காப்பியமாக ஆக்கித் தர வேண்டுகின்றான். சேக்கிழழரும் தில்லை நகரை அடைந்து அங்கே ஆடும் கூத்தனிடம் வேண்டி, நாயன்மார் வரலாற்றைப் பாடும் திறனை வேண்டி வணங்க, விண்ணில் இருந்து அசரீரி எழும்பிற்று. "சேக்கிழாரே! "உலகெலாம்" என்ற இந்த முதலடியைக் கொண்டு ஆரம்பித்துப் பாடும். உம் காப்பியம் இம்மண்ணுலகு உள்ளவரையில் நிலைத்து நிற்கும்!" என்ற அருள் வாக்குக் கிடைக்க, அங்கேயே ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி சேக்கிழார் பெரிய புராணத்தை எழுத ஆரம்பிக்கின்றார்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















