அறூபத்து மூவர் - 10
பிள்ளையார் பாட்டி
கோயிலுக்கு வழிபாட்டிற்கெனச் சென்று கொண்டிருந்த இளவரசனின் தேரில் எங்கிருந்தோ துள்ளி ஓடி வந்த பசுங்கன்றானது மாட்டிக் கொண்டு உயிர் நீக்கவும் அரசகுமாரன் பெரும் சோகத்தில் ஆழ்ந்தான். இறந்து கொண்டிருந்த கன்றின் தீனக் குரலைக் கேட்ட தாய்ப்பசுவோ, கன்றின் அருகே வந்து தன் கன்றைப் பார்த்துக் கொண்டே அது இறந்துவிட்டதை உணர்ந்து கண்ணீரைச் சொரிந்தது. பசுவின் துயரம் மனதை உலுக்க வீதி விடங்கன் செய்வதறியாது திகைத்தான். புலம்பி அழுதான். அறவோர்களைக் கண்டு இதற்குப் பரிகாரம் செய்ய முடியுமா என விசாரிக்கச் சென்றான். தாய்ப்பசுவோ அரண்மனைக்கு ஓடியது. மநுநீதிச் சோழன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய காண்டாமணி கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அதன் பெயர் ஆராய்ச்சி மணி ஆகும். அந்த மணியை மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், மக்களின் குறைகளை அம்மணி ஓசை மூலம் நேரில் மன்னனே கேட்டறிந்து மக்களின் குறை தீர்க்கவும் கட்டப் பட்டிருந்த ஒன்றாகும். அது நாள் வரையில் அம்மணியானது ஒரு நாள் கூட ஒலித்தது இல்லை.
அன்று கன்றை இழந்த அந்தத் தாய்ப்பசுவானது ஓடி வந்து கண்களில் கண்ணீர் மழையெனக் கொட்ட, தன் வாயினால் மணியில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த கயிற்றை இழுத்து மணியை அடிக்கலாயிற்று. அதிர்ந்தது அரண்மனை! கணீர், கணீர் என மணி ஓசை கேட்கலாயிற்று. உள்ளே அவசர ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்த மன்னனுக்குச் செய்தியும் போயிற்று. மணி ஓசையும் போயிற்று. மனம் பதறிய மன்னன் அரண்மனை வாயிலுக்கு ஓடோடி வந்தான். வந்தால் அவன் கண்டதோ அரியதொரு காட்சி. வாய் பேச முடியாப் பசு ஒன்று கண்களில் இருந்து கண்ணீர் பெருக மணியை அடித்துக் கொண்டிருந்தது. திகைத்துப் போன மன்னன் என்ன நடந்தது என அறிய முயன்றான். அப்போது இளவரசனுடன் சென்ற காவலர்கள் மூலமாய் அமைச்சர்களுக்குச் செய்தி எட்டி, அவர்கள் மன்னனிடம் நடந்த விபரத்தைத் தெரிவித்தனர். மன்னன் மனம் இடிந்து போனான். நீதி தவறாமல் அரசாட்சி புரிந்து கொண்டிருந்த தனக்கு இப்படி ஒரு சோதனையா? நீதி தவறி விட்டோமா? என எண்ணிக் கலங்கினான். மகனை விட அதிகமாய், கன்றை இழந்த பசுவை விட அதிகமாய்க் கலங்கினான் மன்னன். இறைவனை மனமாரப் பிரார்த்தித்தான்.
பசுவதை செய்த பாவத்தை இந்தச் சோழர் குலத்திற்குச் சுமத்திவிட்டானே என் மகன். பெருமையோடிருந்த இந்தச் சோழர் குலம் இன்று சிறுமையைச் சந்திக்க நேரிட்டதே! அடைக்கலம் கொடுத்த ஒரு புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் வம்சத்தில் வந்த எங்கள் சோழ குலத்திற்கு என் மகனால் அபவாதம் நேரிட்டு விட்டதே! எனை ஆளும் ஈசா? இந்தப் பசுவின் அங்கங்களில் அனைத்து தேவாதி தேவர்களும் வாழுகின்றனரே!” என்று புலம்பினான் மன்னன்.
இப்போது நாம் மன்னனைச் சற்று நேரம் அழ விட்டுவிட்டு, பசுவின் உடல் பாகங்களில் எந்த எந்தத் தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர் நம் பெரியோர்கள் என்று பார்ப்போமா?? குழந்தைகளாகிய உங்களுக்கு இவை தெரிந்தால், உங்கள் நண்பர்கள் யாரேனும் பசுவை அடித்துத் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
பசுவின் கொம்பினடியின் ஸ்ரீமந்நாராயணனும், பிரம்மாவும் வசிக்கின்றதாய் ஐதீகம். கொம்பின் நுனியில், கங்கை, நர்மதா, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளும், சராசரம் எனப்படும் இவ்வுலகமும், சிரத்தில் அந்த சிவபெருமானும், நடு நெற்றியில் சிவனின் இடப்பாகம் குடிகொண்டிருக்கும் உமையும், நாசி (மூக்கு) நுனியில் கந்தனும், நாசியின் உள் பக்கமாய் அஷ்டதிக்பாலர்களும் இருக்கின்றனராம். அஸ்வினி தேவர்கள் பசுவின் இரு செவிகளிலும், பசுவின் இரு கண்கள் சூரிய, சந்திரர்களாகவும், பற்களில் வாயுவும், நாக்கினில் வருணனும் வாழ்கின்றனராம். பசுவின் இதயத்தில் சரஸ்வதியும், கபாலத்தில் இயமனும், யக்ஷர்களும், உதட்டில் ஒரு நாளின் முப்பொழுதுகளான காலை, உச்சி, மாலை என்ற பொழுதுகளும், கழுத்தில் இந்திரனும், இடையில் அருக்கதேவர்களும், மார்பில் சரத்தியர்களும் வசிக்கின்றனர்.
நான்கு கால்களிலும் அநிலர்களும், முழங்காலில் மருத்துவர்களும், குளம்பின் நுனியில் நாகர்களும், குளம்பின் நடுவில் கந்தர்வர்களும், மேற்குளம்பில் தேவமாதரும், முதுகில் உத்திதரும், சந்துகளில் அஷ்டவசுக்களும் வசிக்கின்றனர். பசுவின் அரைப்பரப்பில் பித்ருதேவர்களும், பகத்தில் சப்தமாதாக்களும், குதத்தில் ஸ்ரீ மகாலட்சுமியும், அடிவாலில் அமரர்களும் வால்மயிரில் கதிரொளியும், வயிற்றில் பூமாதேவியும், மடிகளில் பெருங்கடல்களும், வயிறு, இதயம், முகம் ஆகிய மூன்று இடங்களில் காருகபத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்கினி ஆகிய முத்தீயும், எலும்பிலும், சுக்கிலத்திலும் வேள்வித் தொழில்களும், எல்லா அவயவங்களிலும் கற்புக்கரசிகளும் வாழ்கின்றனர்.
குழந்தைகளே, இப்போப் புரிஞ்சுதா? பசுக்களை ஏன் அடித்துத் துன்புறுத்தக் கூடாது என்று? பொதுவாகவே எந்த வாயில்லாப் பிராணிகளையுமே துன்புறுத்தக் கூடாது. அதிலேயும் நமக்குப் பால் தரும் பசுவைத் துன்புறுத்தலாமா? அத்தகைய பசுவின் கன்றைக் கொன்ற மன்னனின் மகனுக்கு மன்னன் தரப் போகும் தண்டனை என்ன? பார்க்கலாமா?
மன்னன் தன் மந்திரிகளைக் கலந்து ஆலோசித்தான். அனைவரும் இது அறியாமல் ஏற்பட்ட ஒன்றே. இளவரசன் பசுங்கன்றைக் கொல்ல வேண்டுமென எண்ணிக் கொல்லவில்லை அல்லவா? கன்றுதானே தானே தவறுதலாய் வந்து மாட்டிக் கொண்டு இறந்தது, இது இறைவன் கட்டளையாகவும் இருக்கலாமே? அரசகுமாரன் பொறுப்பில்லை என்று மன்னனைத் தேற்றுகின்றனர். மன்னன் கோபம் கொண்டான். நீதி வழுவாதவன் மனுநீதிச் சோழன் என்ற பெயர் எடுத்த என் அமைச்சர்கள் எனக்கு இவ்வாறு ஆலோசனை கூறுவதா எனக் கேட்ட மன்னன், மன்னன் மகன் என்பதால் அவன் செய்தது தவறில்லை என ஆகிவிடுமோ? இதுதான் அறவழியில் செல்லுதலுக்கு அடையாளமோ? இல்லை, இது பசுவின் துயரைப் போக்குமா? பசுவின் துயரம் ஆறாத ஒன்றாகும். வீண்பழியைத் தேடிக் கொள்ளும் செயலை நான் எவ்வாறு செய்வேன்? இந்தப் பசுவின் கன்று எந்த இடத்தில் தேர்க்காலில் மாட்டிக் கொண்டு இறந்ததோ, அதே இடத்தில் என் மகனைக் கிடத்தி அதே தேர்க்காலால் ஏற்றிக் கொல்லுவது ஒன்றே சிறந்த பிராயச்சித்தமாகும் என மன்னன் கூற, மந்திரி திகைத்துச் செய்வதறியாது, தன் ஆவியைப் போக்கிக் கொள்ள செய்தி அறிந்த மன்னன் இனி தானே செயலில் இறங்கவேண்டும் எனத் தீர்மானம் செய்து கொள்கின்றான்.
காவலரை அழைத்துத் தன் மகனை அழைத்து வரச் செய்து தேரில் ஏற்றி எந்த இடத்தில் பசுங்கன்று தேர்ச்சக்கரம் ஏறி உயிரை விட்டதோ, அதே இடத்தில் தன் மகனைக் கிடத்தித் தேர்க்காலை மகன் மார்பில் ஏற்ற, மன்னன் மகன் உடனே உயிர் துறக்கின்றான். என்ன இருந்தாலும் மகன், அதுவும் ஒரே மகன் ஆயிற்றே, இறந்த சோகம் தாங்காமல் மனுநீதிச் சோழன் மயங்கிக் கீழே சாய்கின்றான். மக்கள் கூட்டம் கூடி அலறிப் பரிதவிக்கின்றது. அப்போது நடந்தது ஓர் அற்புதம்! இறைவன் ரிஷபாரூடராய் விண்ணில் தோன்றினார். கூடவே அன்னையும். வீதிவிடங்கப் பெருமான் அருள் புரிய, இறந்த பசுங்கன்று, அமைச்சர், மன்னன் மகன் அனைவரும் உயிர் பெற்று எழ, மன்னன் மகன் தன் தந்தையையும், வீதி விடங்கரையும் வணங்கி நிற்கின்றான். உடனேயே பசுவும், கன்றும் மாயமாய் மறைய கூடி இருந்தவர்களோடு மன்னனும் திகைத்தான்.
அப்போது விண்ணில் இருந்து அசரீரி வாக்கு அனைவர் காதிலும் விழுந்தது. மனுநீதிச் சோழனின் நீதியையும், நேர்மையையும், சோதித்து, அவனின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டியே இறைவன் திருவுளப்படி, இந்திரன் பசுவாகவும், இயமன் கன்றாகவும் வந்து அங்கே ஒரு நாடகம் நடத்தப் பட்டது எனக் கேட்டது. அனைவரும் மன்னன் புகழைப் போற்றிப் பாடினார்கள். இறை அருள் கூடி நிற்க மனுநீதிச் சோழன் பல்லாண்டு நீதியும், நேர்மையும் தவறாது ஆட்சி புரிகின்றான். இத்தகையதொரு பெருமை வாய்ந்த சிறப்பைப் பெற்றிருக்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் ஊரின் சிறப்பும், கோயிலின் சிறப்பும் அளவிட முடியாத ஒன்றாகும். சேக்கிழார் இதைக் குறிப்பிட்டே தம் பெரியபுராணத்தைத் தொடங்குகின்றார்.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















