-
அறுபத்து மூவர் - 12
- கீதா சாம்பசிவம்
சுந்தரமூர்த்தி நாயனார் கதை ஆரம்பம்!
திருநாவலூர் என்னும் திருத்தலம். நீர்வளமும், நிலவளமும் மிகுந்திருந்த அந்தத் தலத்தில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்பவருக்கும், நற்குண நங்கை என்பவருக்கும் ஒரு மகன் பிறந்தான். இந்த மகனே ஆலால சுந்தரர் ஆவார். எனினும், அவர் பிறந்த போதோ பெற்றோர் அதை அறியவில்லை. குழந்தைக்கு “நம்பி ஆரூரர்” என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிறு பிள்ளையாயிருக்கும்போதே குழந்தையின் அழகு தெய்வீகமாய் இருந்தது. பெற்றோரும் இத்தகைய பேரழகு வாய்ந்த குழந்தைக்குப் பல்வேறு அணிகலன்களால் அலங்கரித்து விட்டிருந்தனர். ஒரு நாள் நம்பி ஆரூரர் தன் வயதுக்கு ஒத்த சிறுபிள்ளைத் தனத்தோடு வீதியில் விளையாட்டுத் தேரான சிறு தேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமுனைப்பாடி நாட்டு மன்னன் ஆன நரசிங்கமுனையர் அவ்வழியே திருநாவலூர்க் கோயிலுக்கு வந்து எம்பெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையில் வீதியில் தேரை உருட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் கண்டு அவன் அழகில் தம்மை மறந்தார். தேரிலிருந்தும் இறங்கி அந்த தெய்வக் குழந்தையைக் கையில் தூக்கிக் கட்டி அணைத்து உச்சி முகந்தார். பெற்றோர் யார் எனக் கேட்டு அறிந்தார்.
பின்னர் குழந்தையைத் தாமே தம் கைகளில் தூக்கிக் கொண்டு சடையனாரிடம் வந்தார். பெற்றோர் மன்னனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தது கேட்டு அதிசயிக்க, சடையனாரைக் கண்ட மன்னன், ”ஆஹா, நாம் வந்த காரியம் பலிதமாகிவிட்டதே, இவன் நம்முடைய சிநேகிதன் அல்லவோ?” என மனம் மகிழ்ந்தார். சடையனாரிடம் மன்னன், “ நண்பா, உன் மகனின் அழகில் மயங்கிவிட்டேன். அறிவிலும் சிறந்திருப்பான் என என் உள்மனம் சொல்லுகின்றது. ஆகவே இந்தக் குழந்தையை நான் என் மகனாய் வளர்த்து வர நீ அனுமதி தர வேண்டும். சகல கலைகளிலும் வல்லவனாக்குகின்றேன்.” என்று ஆசையும் அன்பும் மீதூறக் கேட்டான். சடையனாரும், அவர் மனைவியும் மறு மொழி மறுத்துப் பேசாமல் நம் குழந்தை அரண்மனையில் வளர வேண்டும் என அந்த நாவலூர் ஐயனின் சங்கல்பம் போலும் என எண்ணிக் கொண்டு மன நிறைவோடு மன்னனோடு மகவை அனுப்பி வைத்தனர்.
ஆரூரர் அரண்மனையில் ஒரு அரசகுமாரனைப் போல வாழத்தொடங்கினார். அரசர்க்குரிய அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். உரிய பருவத்தில் உபநயனமும் செய்து வைத்தான் மன்னன். பெற்றோர்கள் ஆரூரருக்கு விரைவில் திருமணம் செய்விக்க எண்ணம் கொள்ளவே. அரசரும் அவர்கள் விருப்பம் போல் மணப்பெண்ணைத் தேடித் தேர்ந்தெடுக்குமாறு கூற, பெற்றோர் ஆரூரருக்கு ஏற்ற பெண்ணைத் தேடினார்கள். நாவலூருக்கு அருகே உள்ள புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாசாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. திருமணம் நிச்சயம் ஆனது. நல்ல நாள் பார்த்து முகூர்த்தமும் குறிக்கப் பட்டது. பெண் வீட்டாரது ஊரான புத்தூரிலேயே திருமண ஏற்பாடுகள் சிறப்பாய்ச் செய்யப் பட்டன. திருமணத்துக்கு முதல்நாள் ஆரூரர் திருநாவலூரில் இருந்து அக்கால வழக்கப் படி வெண் புரவியில் உற்றாரும், உறவினரும் புடைசூழ, மங்கல ஒலிகள் எழுப்பப் பட, இனிய கீதங்கள் இசைக்கப் பட, வாத்தியங்கள் முழங்க மேளதாளத்தோடு பெண் வீட்டுக்குப் பயணம் ஆனார்.
ஆரூரர் மன்னருக்குரிய விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களைத் தரித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அந்தணர்க்குரிய உபவீதம் போன்றவற்றையும் தரித்திருந்தார். பெண் வீட்டிற்குச் சீர் வரிசைகளைப் பொன் தட்டுகளில் பிள்ளை வீட்டார் தாங்கிவர, பாலிகைகள் ஏந்தி சுமங்கலிப் பெண்கள் முன்னால் வர, ஊர்வலம் பெண் இருக்கும் ஊரான புத்தூரை அடைந்தது. திருமணப் பந்தல் மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வாழையும் கமுகுகளும் நாட்டப் பட்டு, தென்னக் குருத்தோலைகளாலும், பனங் குருத்தோலைகளாலும் தோரணங்கள் தொங்கவிடப் பட்டு, பூச்சரங்கள் கட்டப் பட்டு, மாவிலைகள் கூடிய தோரணங்களோடு அழகுற அமைக்கப் பட்டிருந்தது மணப்பந்தல். மணப்பிள்ளையான ஆரூரரின் அழகைக் கண்டு வியந்தனர் வந்தவர் அனைவரும். பெண்ணின் அதிர்ஷ்டத்தை எண்ணி மெச்சிக் கொண்டனர். பலவாறு புகழ்ந்து பேசி ஆரூரரின் திருமணக் கோலத்தைக் காணும் ஆவலில் காத்திருந்தனர் அனைவரும். ஆனால் மறு நாள் திருமணம். மங்கலச் சடங்குகள் ஆரம்பித்தன. அப்போது!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















