தாயென்று கும்பிடடி பாப்பா
- ஆலயம் என்பது வீடானால்?
முரளி
ஆலயத் திருப்பணி
என் இல்லத்துக்கருகே ஒரு சிறு கோவில் உள்ளது. அங்கு நான் தினமும் காலையில் செல்வது வழக்கம். ஒரு நாள் வழக்கம்போல் நான் கோவிலுக்குச் சென்றபொழுது அக்கோவிலில் இருந்த உள்ளூர் மக்களுடன் கோவிலின் தரையைச் செப்பனிடும் தேவை குறித்து விவாதிக்க நேர்ந்தது. கோவிலின் தரை மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததுடன் அதன்மேல் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. குறிப்பாகத் திருவிழா நாட்களில் கடவுளைக் கோவிலைச் சுற்றித் தூக்கி வரும்பொழுது மிகவும் கடினமாக இருந்தது. ஆங்கிருந்த மக்கள் சிலர் இதற்காகப் பொருளுதவி புரிய முன்வந்தனர். சேவாயலயாவில் எப்பொழுதும் ஏதேனும் கட்டுமானப் பணிகள் நடப்பதால் அந்தக் கான்டிராக்டரை அழைத்து இக்கோவிலின் தரை செப்பனிடும் பணிக்கான செலவினங்களைக் கணக்கிடச்சொன்னேன். கணக்கிடப்பட்ட தொகை அங்கிருந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பணிகள் துவங்கின. கடப்பைக்கற்கள் என்றறியப்படும் தரைக்கான கற்கள் ஆந்திராவிலுள்ள கடப்பா எனும் ஊரிலிருந்து தருவிக்கப்பட்டு, கட்டுமானப்பணிக்காகக் கடப்பாவிலிருந்தே நான்கு பணியாட்களும் வரவழைக்கப்பட்டனர். முழுப்பணியும் தொடர்ந்து நடைபெற்று ஒரு மாதத்திற்கு மேல் சில நாட்களில் முடிவடைந்தது. இந்த நான்கு பணியாளர்களும் தினமும் காலையில் 6 மணிக்கு வேலையைத் துவங்கி இரவு 9 அல்லது 10 மணி வரை வேலை செய்தார்கள். அவர்கள் வார இறுதி விடுப்பேதும் எடுக்கவில்லை. பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவே விரும்பினர்.பணீக்காலங்களில் அவர்கள் கோவிலினுள்ளேயே படுத்துறங்கிக் கோவிலையே தங்கள் இல்லாமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருந்ததுடன் பணியை அழகுற முடிக்க அதிகப்படியான அக்கரை எடுத்துக்கொண்டனர். மேலும் இதுபோன்ற பணிகள் இருப்பின் அவர்களது சேவையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டி அவர்களது பெயர்களை நான் அறிய விரும்பினேன். அந்நால்வரில் தலைவன் பெயர் சிராஜுதீன், ஆம் அவர்கள் நால்வரும் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் கோவிலுக்குள் தங்குவதனால் ஏதேனும் பிரச்சனைகள் வரக்கூடாதென்று எண்ணிய நான் கோவிலின் அரச்சகரிடம் இதுபற்றிக் கூறினேன். ஆனால் அப்படி ஏதும் பிரச்சினை எழவில்லை. அந்த ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தில் அப்பணியாட்கள் நால்வரும் சைவ உணவை மட்டுமே உட்கொண்டனர். சிலர் மாமிச உணவை அளிக்க முன்வந்தபொழுதும் கோவில் திருப்பணி செய்கையில் முழுதும் துய்மையாக இருக்க வேண்டுவதால் புலால் உண்பது தவறு எனக்கூறி மறுத்துவிட்டனர். புகைபிடிப்பதைக் கூட அப்பணிக்காலத்தில் அவர்கள் நிறுத்திவிட்டனர்.
அவர்களிடம் பேச்சுக்கொடுத்ததிலிருந்து அவர்கள் பல கோவில்களில் பணிபுரிந்துள்ளனர் என்று தெரியவந்தது. 108 அதிமுக்கியமான மஹாவிஷ்ணு ஆலயங்களில் 22க்கு அவர்கள் கல்வேலைப்பாடு செய்துள்ளனர் என அறிந்தோம். எப்பொழுதெல்லாம் ஆலயத்திருப்பணி மேற்கொண்டனரோ அப்பொழுதெல்லாம் எத்தனை நாட்கள் பணி தொடர்ந்தாலும் அந்நாட்களில் ஒரு இறைவனடியாரைப் போன்ற வாழ்வையே அவர்கள் வாழ்ந்தனர் என்பதையும அறிந்தோம்.
பணி முடிந்த இறுதி நாளன்று அவர்களின் பணியில் முழுமையான திருப்தியடைந்து அவர்களுக்குக் கோவிலில் சிறப்பு மரியாதை செய்து, பிரசாதமும் வழங்கினார் அர்ச்சகர். அவர்களைத் தன் இல்லத்துக்கும் விருந்துண்ண அழைத்து உணவளித்தார். விருந்துண்ட பின்னர் அப்பணியாட்கள் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.
நம் பாரத நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் மத நல்லிணக்கத்துடனும் நட்புடனும் அமைதியுடனும் வாழ்கின்றனர் என்பதற்கு இதைவிட ஒரு சான்று வேண்டுமா?
முரளி
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













