"பல" ராமனா? பலராமனா?
வைரா
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று எல்லோரும் சொல்வார்கள். கலகத்தை உண்டாக்குவது போல் தோன்றினாலும் பிற்காலத்தில் நல்ல பலன் தான் கிடைக்கும். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாரதருக்கு ஆணவம் (கர்வம்) ஏற்படடதாம். கிருஷ்ணனுடைய அண்ணன் பலராமனுக்கும் கூட ஆணவம் (கர்வம்) இருந்ததாம், ஏன்? கிருஷ்ணனின் மனைவி சத்திய பாமாவுக்கே ஆணவம் இருந்ததாம் என்றால் பாருங்களேன். மூவருடைய கர்வத்துக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினார் பகவான் கண்ணன்.
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே நாரதருக்குத் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தன் கருத்தைக் கிருஷ்ணனிடம் தெரிவித்தார் நாரதர். அதற்குக் கண்ணன் பதில் சொன்னார், "நாரதா, நீ சென்று அனுமனைப் பார். நான் சொன்னதாக அனுமனிடம் சொன்னால் அனுமனே உன்னைத் தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் செல்வார். உன் தீர்த்த யாத்திரை மிகச் சுலபமாக முடிந்துவிடும். யாத்திரை முடிந்து விட்ட பிறகு அனுமனை என்னை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டு வா." என்று.
நாரதருக்கு ஒரே மகிழ்ச்சி. அனுமனோடு சென்றால் எந்தச் சிரமும் இல்லாமல் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்ற எண்ணத்துடன் நாரதர் நேராக அனுமனிடம் சென்றார். கண்ணன் அனுப்பியதாகக் கூறினார்.
"என்ன விஷ்யம்" என்று அனுமன் கேட்டார்.
நாரதர் பதில் சொன்னார், "நான் தீர்த்தயாத்திரை செல்ல விரும்புகிறேன், என்னைத் தாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது கண்ணனின் விருப்பம்" என்று.
உடனே அனுமன், "ஒ அப்படியா!" என்று கேட்டுக்கொண்டே தன் வாலை நீட்டி வாலால் நாரதரைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு உயரே பறக்க ஆரம்பித்துவிட்டார். அனுமனை ஒவ்வொரு குளத்திலும், ஆற்றிலும் நாரதரைத் தண்ணீரில் நன்றாக மூழ்குமாறு அமுக்கி அமுக்கி எடுக்கலானார். சில இட்ங்களில் நீண்ட நேரம் அமுக்கிவிட்டு மெதுவாக வெளியே எடுப்பார். இதனால் நாரதருக்குப் பல நேரங்களில் மூச்சுத் திணறியது. எல்லா இடங்களிலும் தண்ணீரில் மூச்சுத் திணரும் வரை முழுக்கி முழுக்கி எடுத்ததால் நாரதருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. எனவே நாரதர் அனுமன் வாலிலிருந்து விடுபட முயற்சித்தார். மிகவும் அதிகமாக முயன்றும் முடியவில்லை.
கெஞ்சினார், கூத்தாடினார், "என்னை விட்டுவிடு தீர்த்தயாத்திரை போதும்" என்று.
நாரதர் பல முறை கூறியும் அனுமன் விடவில்லை. எல்லாத் தீர்த்தங்களிலும் நீராட்டிய பின்தான் விடுவேன் என்று கூறிக்கொண்டே சென்று கொண்டிருந்தார் அனுமன்.
நாரதர் அனுமன் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று சிந்திக்கலானார். தீர்த்த யாத்திரையின் முடிவில் அவருக்கு ஒரு உண்மை விளங்கியது. இவ்வாறு தன்னை அனுமன் நீரில் அமுக்கியதற்குக் காரணம் கண்ணுடைய தூண்டுதலாகத்தான் இருக்கும் என்று உணர்ந்தார் நாரதர். ஆம்! அது தான் உண்மை! (என்னை யாராலுமெதுவும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அந்த ஆணவத்தைப் போக்கவே இவ்வாறு கண்ணன் அனுமன் மூலம் எனக்கு இத்துன்பத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது தான் அது).
கண்ணன் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். எது எப்படியோ நம் உள்ளத்தில் இருந்த ஆணவம் நீங்கியது என்று எண்ணினார் நாரதர். நாரதரின் மனத்தில் இருந்த ஆணவம் அகன்றதால் அனுமனும் தீர்த்த யாத்திரை முடிந்தது என்று கூறி நாரதரை விடுவித்தார்.
விடுவித்தவுடன் அனுமனிடம் நாரதர் சொன்னார், "கண்ணன் தங்களை அழைத்து வரச்சொன்னார். தாங்கள் சென்று கண்ணனைப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று.
"நான் ஏன் கண்ணனைச் சந்திக்க வேண்டும்? அவர் வேண்டுமானால் வந்து பார்க்கட்டும்" என்று அனுமன் கூறினார்.
இதைக் கேட்ட நாரதர் தன் வேலையை ஆரம்பிக்க ஒரு நல்ல இடம் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.
நாரதர் தான் கலகக்காரராயிற்றே, நேராகக் கண்ணனிடம் சென்றார், "என்ன கண்ணா, அந்த அனுமன் வர மறுக்கிறார். அலட்சியமாகப் பேசுகிறார். என்ன கண்ணா இது?" என்று அன்பான அதிகாரத்தோடு கேட்டார்.
வர மறுக்கிரார் என்று நாரதர் சொன்ன அந்தச் செய்தினைக் கேட்ட உடனே பக்கத்திலிருந்த பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவரும் நாரதரோடு சேர்ந்து கொண்டு கேட்டார், "என்ன கண்ணா இது,. ஒரு அல்பத்தமான குரங்கு இப்படிப் பேசுகிறது? என்ன துணிச்சல் அந்தக் குரங்குக்கு? நான் போய் இப்போதே அந்தக் குரங்கைக் கட்டி இழுத்திக் கொண்டு வருகிறேன் என்று கூறிக்கொண்டே கோபத்தோடு ஆவேசமாகப் புறப்பட்டார் பலராமர். அனுமன் முன் சென்று நின்றார்.
அனுமன் கேட்டான், "யார் நீ?" என்று.
"பலராமன்" என்று தன் பெயரை கம்பீரமான குரலில் சொன்னார் பலராமர்.
பலராமன் என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே அனுமன் பலராமனின் கன்னத்தில் ஒங்கி ஒரு குத்துவிட்டார். பலராமனுடைய கன்னம் சிவந்துவிட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் அடி வாங்கியதும் மிரண்டுபோன அந்தப் பலராமனைப் பார்த்து மிகச் சாதாரணமாகச் சற்று மிரட்டும் பாணியில் பேசினார் அனுமன், "பலராமனா நீ? எனக்குத் தெரிந்தவன் ஒரே ஒரு இராமன்தான். அவன் தான் சீதாராமன், அவன்தான் பலமான ராமன், மற்றவர்கள். எல்லாருமே பலமில்லாத ராமன்கள்தான். என் இராமனை விட பலமான ராமனா நீ?" என்று மீண்டும் பரிகாசம் செய்தான் அனுமான்.
பலராமன் அனுமனின் எதிரில் நிற்க முடியாமல் கண்ணனிடம் ஒடி வந்து சேர்ந்தான். விஷயத்தைச் சொன்னான்.
கண்ணன் கேட்டான், "நீங்கள் ஏன் தனியாகச் சென்றீர்கள். உங்களுடன் பல வீரர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கக் கூடாதா, சரி பரவாயில்லை, மிக பலசாலிகளான பல வீரர்களைத் துனணக்கு அழைத்துக் கொண்டு மீண்டும் சென்று வாருங்கள்" என்று கண்ணன் சொன்னதும் பலசாலிகளான பல வீரர்களை அழைத்துக் கொண்டு சென்று, பலராமன் முயன்றபோது மீண்டும் அனுமன் அடித்த அடியைத் தாங்க முடியாமல் வீரர்களோடு திரும்பக் கண்ணனிடம் வந்தார்.
இவர்களைப் பார்த்துக் கண்ணன், "என்ன அண்ணா, இப்பொழுதும் அனுமனைத் தங்களால் அழைத்து வர இயலவில்லையா?" என்று கேட்டார்.
"முடியவில்லையே தம்பி" என்றார் பலராமர்.
இப்பொழுது கண்ணன் பலராமனிடம் கூறினார், "தாங்கள் மீண்டும் சென்று ஸ்ரீராமன் அழைப்பதாகச் சொல்லிப் பாருங்கள்" என்று கூறினார் கண்ணன். இதைக் கேட்ட பலராமர் மீண்டும் நாரதரையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார். ஸ்ரீராமன் தாங்களை அழைத்து வரச்சொன்னார் என்று சொன்ன அந்தச் சொல் முழுமையாகக் காதில் விழுவதற்கு முன்பாகவே கைக்குப்பி வணங்கிப் புறப்படத் தயாராகிவிட்டார் அனுமன்.
"நீங்கள் இருவரும் என் தோள்மேல் ஏறி அமருங்கள்", என்று இரண்டு பேரையும் தோளில் ஏற்றிக்கொண்ட அனுமன், "ஸ்ரீராமன் பெயரை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?" என்று கேட்டு முந்தைய செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டார்.
நாரதரோடும் பலராமனோடும் அனுமன் கண்ணன் இருக்கும் இடத்தை அடைந்தார். அனுமன் முதுகிலிருந்து கீழே இறங்கிய நாரதரும் பலராமரும் கண்னனைக் காண உள்ளே சென்று கன்ணனிடம் அனுமனின் வருகையைக் கூறினார்கள். உடனே மகிழ்ச்சி தெரிவித்தார் கண்னன். அனுமனும் கண்ணனின் அழைப்புக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார். நாரதர், பலராமன் இருவருமே இது கிருஷ்ணனின் வேலையாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்கள். தாங்கள் கொண்டிருந்த கர்வத்தை அடக்க இப்படிபட்ட செயலைக் கண்ணன் தான் செய்திருப்பான் என்று உணர்ந்து கொண்டார்கள்.
இப்போது அனுமனுக்குக் காட்சி கொடுக்க வேண்டும், அதுவும் இராமனாகக் காட்சி கொடுக்க வேண்டும். அதுவும் சீதாராமனாகக் காட்சி கொடுக்க வேண்டும். அனுமன் ஸ்ரீராமனை சீதையோடு பார்த்தால் தான் திருப்தி அடைவார் என்று எண்ணினார் கண்ணன். ஏனென்றால் ஸ்ரீராமன் அழைப்பதாகக் கூறினால் தானே அனுமன் இங்கு வந்திருக்கிறார். அதன்படி சீதாராமன் காட்சியைக் காண வந்துள்ள அனுமனுக்கு அவ்வாறே காட்சி கொடுக்க விரும்பினார். எனவே அவர் நாதரரைப் பார்த்துக் கூறினார், "நீங்கள் சென்று, பாமாவை சீதையைப்போல அல்ங்காரம் செய்து கொண்டு வரச் சொல்லுங்கள்." என்று.
அதைக் கேட்ட உடனே, நாரதர் வேகமாக பாமாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். பாமாவும் சீதையைப் போலவே அல்ங்காரம் செய்து கொண்டு வந்தார். சீதையின் உருவில் இருக்கும் பாமாவைக் கண்டவுடனே முகத்தைச் சுளித்தார் கண்னன். ஏனென்றால் பாமா சீதை மாதிரி இல்லை. பாமாவாகவே இருந்ததால் பாமாவைப் பார்ந்து, "என்ன பாமா, சீதை இப்படியா இருந்தாள்? ஒரு பக்தனுக்கு அவன் விரும்பும் வகையில் காட்சி கொடுக்க உனக்குத் தெரியவில்லையா?" என்று கடுகடுத்தார்.
பின்னர் நாதரைப் பார்த்து 'நீங்கள் ருக்மணியிடம் சென்று, நான் அழைத்ததாகச் சொல்லி ருக்மணியை சீதையின் உருவத்தில் வரச் சொல்லுங்கள்" என்று சொன்னார். இதை நாரதர் ருக்மணிடம் சொன்னதும், ருக்மணியும் உடனடியாக சீதையின் வேடத்தில் கண்ணனிடம் வந்தாள். அனுமனுக்கு சீதையின் உருவத்தில் காட்சி தர இருக்கிறோம் என்ற அருள் உள்ளத்தோடு வந்தாள் ருக்மணி.
சீதாவாக இருக்கும் ருக்மணியின் தோற்றத்தைக் கண்டு திருப்தியடைந்தார் கண்ணன். பாமாவுக்கு ஆச்சரியம் வந்துவிட்டது. தன்னால் முடியாதது அவளால் முடிந்ததே என்று எண்ணி, தனக்குள்ளிருந்த அகந்தையே இதற்குக் காரணம் என்று புரிந்து கொண்டாள் பாமா. எனவே கண்ணனிடம் மன்னிப்பு வேண்டினாள். அனுமனுக்குக் காட்சி கொடுப்பதற்காக ருக்மணியும் கண்ணனும் சீதா ராமனாகத் தயாரானார்கள். இதைக் கண்ட நாரதர் வெளியில் சென்று அனுமனை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார். இப்போது ருக்மணியும் கண்ணனும் சீதாராமனாகவே அனுமனுக்குக் காட்சி அளித்தனர். அவர்களைக் கண்ட அனுமன் வணங்கி வலம் வந்து ஆனந்தக் கூத்தாடினார்.
சிறிது நேரம் ஆனந்தக் கூத்தாடி அனுமன் திருப்தியடைந்ததும் அவனிடம் கண்ணன் சொன்னார், "அனுமனே, நான் இராமவதாரம் முடிந்து வைகுந்தம் புறப்பட்டபோது நீ என்னைப் பிரிய நேரிடுகிறதே என்று பெரிதும் மனம் கலங்கினாய். நான் அப்போது உனக்குச் சொன்னேன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணனாக அவதாரம் எடுப்பேன், அப்போது உனக்குக் காட்சி தருகிறேன் என்று.
நீ அப்போது என்னிடம் என்ன வேண்டிக் கொண்டாய்? நினைவிருக்கிறதா? எப்போதும் சீதாராமனாகவே தாங்கள் தரிசனம் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டாய். அதன்படி இப்போது சீதாராமனாகவே தரிசனம் செய்கிறாய். உனக்கு இப்போது மகிழ்ச்சிதானே" என்றார் கண்ணன் சிரித்துக்கொண்டே. அனுமன் புளகாங்கிதம் அடைந்தான். பாதங்களில் விழுந்து வணங்கி சேவித்துக்கொண்டு விடை பெற்றுக்கொண்டான்.
சிறிதளவு ஆணவம் தோன்றினால் கூட உடனே அதைப் போக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாகச் செயல்ப்டுபவர் கண்ணன். தும்பைப் பூ போன்று வெண்மையான ஆடையில் கடுகளவு கறை பட்டாலும் உடனே வருத்தப்பட்டு அந்தக் கறையைப் போக்க முயல்வது தானே இயல்பு. அடுப்பங்கரையில் இருக்கும் கரிக் கந்தையைப் பற்றி யார் எப்போது நினைப்பார்கள்? அப்படித்தான் ஆண்டவனும். நாரதர், பலராமன், மற்றும் பாமா ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட ஆணவத்தை உடனே போக்குவதற்கு இவ்வாறு நாடகமாடினார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதுதானே உண்மை.
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||


















